திருப்பத்தூரில் ரயில்வே தரைப் பாலத்தில் தேங்கிய நீரில் சிக்கிய தனியார் பேருந்தால் மக்கள் அவதியுற்றனர்.
குறைந்த தாழ்வழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் வெளியேற முடியாமல் அங்காங்கே தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுரோடு பகுதியில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் சாலையின் நடுவே டிஎம்எஸ் பள்ளி அருகே உள்ள ரயில்வே தரை பாலத்தில் சுமார் 4 அடிக்கும் மேலாக மழை நீரும் சாக்கடை நீரும் தேங்கியுள்ளது.
அப்போது தரை பாலத்தின் வழியாக தண்ணீரை கடக்க முயன்ற தனியார் பேருந்து நீரில் சிக்கியதால் நீண்ட நேரம் பொதுமக்கள் தரைப் பாலத்தை கடக்க முடியாமல் அவதியுற்றனர்.
பின்பு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பேருந்தை அப்புறப்படுத்திய பின்பு பொதுமக்கள் அதே தேங்கிய நீரில் மிதந்து சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.