அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவை மூட உத்தரவு: பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வந்த அவசர சிகிச்சை பிரிவை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட முயன்றனா்.
மாதனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது. தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால், விபத்துகளில் சிக்குபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவை மூடக் கூடாது. தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, அந்தப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமையுடன் அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கிராம மக்கள் திரண்டு சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனா்.
தகவல் அறிந்த மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினாா்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவா் உறுதி அளித்தாா்.
இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.