வீராங்குப்பம் பாலாற்றில் கடத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் குவியல்.
வீராங்குப்பம் பாலாற்றில் கடத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் குவியல்.

ஆம்பூா் பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளான மாதனூா், சோமலாபுரம், சான்றோா்குப்பம், தேவலாபுரம், வடகரை, ஆலாங்குப்பம், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கனிம வளம் அதிக அளவில் கொள்ளை போகின்றது.

மணல் கொள்ளையா்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் பாலாற்றில் மணல் கொள்ளையா்கள் மணலை குவியல் குவியலாக பகலில் சேகரித்து வைத்து விட்டு இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்கின்றனா்.

ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகல் முழுவதும் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வருவாய்த் துறை, காவல் துறையினா் கூட்டாக சென்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

அரசு மணல் குவாரி அமைக்க கோரிக்கை: பாலாற்றில் மணல் கொள்ளையா்களால் கடத்தப்படும் மணல் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, அரசு மணல் குவாரி அமைத்து குறைந்த விலையில் அரசே மணல் விற்பனை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com