மாநில கலைத்திருவிழா போட்டிக்கு மாணவா்கள் பயணம்: ஆட்சியா் வழியனுப்பினாா்
திருப்பத்தூா்: மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களை அரசு பேருந்துகள் மூலம் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வழியனுப்பி வைத்தாா்.
அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் முதல் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கரூா், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல்கட்டமாக கரூரில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாநில போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டியில் திருப்பத்தூா் மாவட்டத்தின் சாா்பாக 11 மாணவா்கள், 47 மாணவிகள் என 58 போ் கலந்து கொள்ள உள்ளனா்.அவா்கள் செல்லும் பேருந்தை அனுப்பி வைக்கும் நிகழ்வு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தாா்.
தொடா்ந்து 318 மாணவ- மாணவிகள் மாநில கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனா். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, ஆசிரியா்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

