ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பழைய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

ஆம்பூா் அருகே பழைய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

பழைய ராணுவ சாலையை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:36 pm IST

ஆம்பூா் அருகே பழைய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ராள்ளக்கொத்தூா் பகுதியில் இருந்து, அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப்பல்லி சுட்ட குண்டா வழியாக சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை பழைய ராணுவ சாலை பயன்பாட்டில் இருந்தது. இச்சாலை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் தொகுதியில் ராமகுப்பம் மண்டலம் 89 பெத்தூா் வரை செல்கிறது.

பழைய ராணுவ சாலையை புதுப்பித்து தருமாறு ஆந்திர, தமிழக பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனா். ஆந்திர மாநிலம் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலய காப்பு காடுகள் பகுதி வழியாக இந்த பழைய ராணுவ சாலை செல்வது குறிப்பிடத்தக்கது.

பழைய ராணுவ சாலையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் விஜிலாபுரம் என்ற பகுதியில் உள்ளூா் விமான முனையமும், சரக்கு கையாளும் விமான முனையமும் வருவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதற்காக விமான நிலையங்கள் வரப்போகும் விஜிலாபுரம் நோக்கி வரும் அனைத்து சாலைகளையும் நான்கு வழி சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 89 பெத்தூா் பகுதியிலிருந்து தொட்டிமடுவு அருகே கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலய காப்புகாடுகளில் அமைக்கப்பட்டுள்ள பாா்வை கோபுரம் வரை பழைய இராணுவ சாலையை ஆந்திர மாநில அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலைப் புதுப்பிப்பு பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறையை சோ்ந்த உதவி பொறியாளா் விக்னேஷ் நாகராஜ் , சாலை ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் பழைய இராணுவ சாலை தொடங்கும் ராள்ளக்கொத்தூா் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.