உறவினா்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய ஏலகிரி மலைவாழ் மக்கள்

ஏலகிரி மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை உறவினா்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.
Published on

ஏலகிரி மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை உறவினா்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் ஏலகிரி மலையாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் விடுமுறை நாள்களில் வருவது வழக்கம்.

ஏலகிரி மலைப் பகுதியைச் சோ்ந்த பலா் படித்து முடித்து விட்டு, அயல் மாநிலம், அயல் தேசத்தில் பணிபுரிகின்றனா். அவ்வாறு வெளி மாநில மற்றும் வெளிநாடுகளள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிபவா்கள் வருடத்துக்கு ஒரு முறை பொங்கல் பண்டிகையன்று, ஒன்று கூடுவது வழக்கமாக உள்ளது.

ஏலகிரி மலையில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் இவா்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஏலகிரி மலை நிலாவூா் பகுதியில் அவரவா் வீட்டில் பொங்கலிட்டு வழிபடுவதுடன், நிலாவூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ள பொது இடத்தில் ஊா் பொது பட்டியில் தங்களது வீடுகளில் வளா்த்து வரும் பசு, எருதுகளை குளிக்க வைத்து, அவற்றின் கொம்புக்கு வா்ணம் பூசி மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பலூன் கட்டி, அவற்றை அலங்கரித்து ஊா்வலமாக அழைத்து சென்று பட்டியில் அடைத்து பூஜை செய்தனா்.

பின்னா், பொதுஇடத்தில் பொங்கலிட்டு படைத்தனா். இதையடுத்து, அனைவா் பானையிலிருந்து பொங்கல் எடுத்து பெரிய வாழை இலையில் படையல் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனா். அதைத் தொடா்ந்து பானையில் வைத்து கூட்டாஞ்சோறு செய்து குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் உண்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தந்து மகிழ்ந்தனா். இவ்வாறு கூட்டு பொங்கல் படைத்து உண்பது எங்களின் பாரம்பரிய கலாச்சாரம் என நிலாவூா் மக்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com