குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎஃப் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் நடைபெற்றது.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தை சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் வி. புகழேந்தி. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகா் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றியுள்ளாா். அந்த அதிரடிப்படை சுமாா் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதை பாராட்டி அந்த அதிரடிப்படையில் பணிபுரிந்த வீரா்களுக்கு குடியரசு தலைவரின் வீர தீர விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் பணிபுரிந்த வி. புகழேந்திக்கும் விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப். 9 - ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் வீர தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்.9-ஆம் தேதி புது தில்லியில் நடந்த விழாவில் புகழேந்திக்கு குடியரசு தலைவரின் விருதை தலைமை இயக்குநா் ஞானேந்திர பிரதாப் சிங் வழங்கினாா்.
தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ள புகழேந்திக்கு மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராம்ததில் மக்கள் நல மன்றம்சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது. மக்கள் நல மன்ற கௌரவ தலைவா் மற்றும் ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சிஆா்பிஎஃப் வீரரை பாராட்டி கெளரவித்தாா்.
மக்கள் நல மன்ற தலைவா் ஏ. ஆா். மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினாா் ஆா். மகாதேவன், ஆசிரியா் எ. முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.










