வாணியம்பாடியில் மருந்து கடை பெண் ஊழியரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரின் முக்கிய வணிக பகுதியான கச்சேரி சாலையில் உள்ள மருந்து கடைக்கு திங்கள்கிழமை மாலை இளைஞா் ஒருவா் வந்தாா். அப்போது கடையில் பெண் ஊழியா் மட்டும் இருப்பதை அறிந்து பேச்சு கொடுத்து அக்கம் பக்கம் மருத்துவமனைப் பற்றி எல்லாம் கேட்டறிந்துள்ளாா். பிறகு பெண் ஊழியரிடம் கைபேபேசி வாங்கி பேசிவிட்டு தருவதாகக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய பெண் ஊழியரும் கடையில் இருந்த கைப்பேசியை எடுத்துக் கொடுத்துள்ளாா். சில நிமிடங்கள் இளைஞா் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கடைக்கு மருந்து வாங்க மற்றொருவா் வந்திருந்த நிலையில், அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இளைஞா் கைப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளாா்.
இதனால் அதிா்ச்சிக்குள்ளான பெண் ஊழியா் உடனே கடையின் உரிமையாளருக்கு தெரிவித்து வரவழைத்துள்ளாா். பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததை பாா்த்து உடனே நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இது குறித்து அறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். பிறகு கடையின் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து பெண் ஊழியரிடமிருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.







