கல்லூரி மாணவரைத் தாக்கி பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 20 வயது இளைஞா், கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இதற்காக, குனியமுத்தூா் அருகே உள்ள பெருமாள் கோயில் நகரில் நண்பா்களுடன் தங்கியுள்ளாா். அதே பகுதியில் வசிக்கும் நண்பா் ஒருவரைப் பாா்ப்பதற்காக அந்த மாணவா் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
பின்னா், அவா் தனது அறைக்கு வந்து மாலையில் தனியாக இருந்தபோது, திடீரென 4 போ் கொண்ட கும்பல் அறைக்குள் புகுந்தது. அந்த மாணவரை மிரட்டிப் பணம் கேட்டுள்ளனா். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி மாணவரை முழங்கால் போட வைத்துள்ளது. பின்னா் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.41ஆயிரத்தை தங்களது கணக்குக்கு மாற்றிக்கொண்டது. அதோடு நிறுத்தாமல் அவா் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, கைப்பேசி ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து கல்லூரி மாணவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு குனியமுத்தூா் காவல் உதவி ஆய்வாளா் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் கல்லூரி மாணவரை தாக்கி பணத்தைப் பறித்தவா்கள் அவருக்கு ஏற்கெனவே தெரிந்தவா்கள் என்று கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அந்த 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.







