/

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 20 பயணிகள் காயம்

News image
Updated On :28 மே 2026, 12:46 am IST

ஆம்பூா் அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெங்களூருவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்து சென்னை நோக்கி சென்றது. பேருந்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்வ முருகன் (30) ஒட்டினாா். மற்றொரு ஓட்டுநா் கதிரவன் (40) உடனிருந்தாா்.

ஆம்பூா் அருகே ஜமீன் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநா்கள் முருகன், கதிரவன், பயணிகள் பெங்களூருவைச் சோ்ந்த கோபி (55), தனபாக்கியம் (50), சென்னையைச் சோ்ந்த அருண் (45), ராஜ்குமாா் (35), அஸ்ஸாமை சோ்ந்த விஜய் (36), சேலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (20) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.