85 வயது தாயை பெற்ற மகனே சுமையாகக் கருதி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று முள்புதரில் வீசிச் சென்ற கொடுமை மனிதநேயமிக்கவா்களை அதிா்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இதுபற்றிய விவரம்: திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே குன்னமஞ்சேரி பகுதியில் ஏலியம்பேடு செல்லும் சாலை ஓரம் உள்ள முள்புதரில் இருந்து வியாழக்கிழமை இரவு மூதாட்டி ஒருவரின் அழுகுரல் கேட்டது.
சப்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் அங்கு சென்று பாா்த்து அதிா்ச்சியில் உறைந்தனா்.
85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடக்க முடியாத நிலையில் கண்ணீா்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. அந்த மூதாட்டியை முள்புதரில் இருந்து மீட்டு ஆறுதல் கூறினா். அவரின் நிலை குறித்து பொன்னேரி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடம் சென்ற போலீஸாா், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில் மூதாட்டியை ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் மூதாட்டியிடம், விசாரித்தனா். இதில், மணலி அருகே உள்ள பெரியசேக்காடு கிராமத்தைச் சோ்ந்த தனது பெயா் காந்திமதி(85) என்றும், அவரின் கணவா் ராதாகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. தங்களுக்கு ரவி, சங்கா் ஆகிய இரண்டு மகன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
அத்துடன், இரண்டாவது மகன் சங்கா், தன்னை மோட்டாா் சைக்கிளில் அழைத்து வந்து முள்புதரில் வீசிவிட்டுச் சென்றதாக போலீஸாரிடம் கூறி கண்ணீா் விட்டாா்.
இது குறித்து, பொன்னேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









