பூண்டி நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து 9 ஆயிரம் கன அடியாகக் குறைந்ததை அடுத்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 12 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணைகளில் இருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ள நீா், பூண்டி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்திருந்தது. இந்த நிலையில், நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரிநீா் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி சத்தியமூா்த்தி சாகா் நீா்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது 2,630 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.