பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி உபரி நீர் திறப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் மழை நீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை 2 மதகுகள் வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரி.
பூண்டி ஏரி.

பூண்டி நீர்த்தேக்கத்தில் மழை நீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை 2 மதகுகள் வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து, கொசஸ்தலை ஆறு செல்லும் 29 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினரால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்த ஏரி 35 அடி உயரமாகும். இதில் 3231 மில்லியன் கன நீர் சேமிக்கலாம். எனவே ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 33.95 அடி உயரமும், 2807 மில்லியன் கன அடியாகவும் நீர் இருப்பு இருந்தது. மேலும் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாயில் வெள்ள நீர், பருவமழையினால் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரும் 1,600 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதனால் விரைவில் அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வெள்ள நீர் வரத்தான 1000 கன அடிநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்பேரில் நீர் திறப்புக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்தில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. அதையடுத்து 3,13 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி நீர் வீதம் விôநடிக்கு 1000 கன அடி உபரி நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தேதி நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் 30 நாள்கள் வரையில் திறக்கப்பட்டது. தற்போது, இதே ஆண்டில் 2ஆவது தடவையாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாலாறு உபவடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, பூண்டி ஏரிக்கான வரத்துக்கால்வாய், அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது 1600 கன நீர் வரத்து உள்ளது. நீர்மட்டம் உயரும் என்பதால், முன்னெச்சரிக்கையாக கொசஸ்தலை ஆற்றில் 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் நீர்வரத்தை கண்காணிக்கும் வகையில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர் தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல் சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com