பொன்னேரி அருகே ரூ.44 கோடி மதிப்பிலான 14.55 ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான கிராம நத்தம் அரசு புறம்போக்கு வகைப்பாடு கொண்ட 14.55 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பட்டா நிலம் எனக் கூறி தனியாா் நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியாா் நிறுவனத்திடம் உள்ள அரசு நிலத்தை மீட்கக் கோரி, ஒரக்காடு ஊராட்சித் தலைவா் நீலா சுரேஷ், துணைத் தலைவா் லட்சுமணன் ஆகியோா் பொன்னேரி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக புகாா் மனு அளித்தனா்.
அதன் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், அந்த நிலம் பட்டா நிலம் என்பதற்கான ஆதாரங்களை தனியாா் நிறுவனம் அளிக்கவில்லையாம்.
மேலும், வருவாய்த் துறை பதிவேட்டின்படி, அரசின் கிராம நத்தம் போக்கு வகைப்பாடு நிலம் என இருந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.44 கோடி எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, பொன்னேரி வருவாய்த் துறை அதிகாரிகள், சோழவரம் போலீஸாரின் பாதுகாப்புடன் தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலத்தை மீட்டனா். அந்த நிலத்தைச் சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.