ஆவடி அருகே அண்ணனூர் ஏரி உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து தண்ணீரை அகற்ற உத்தரவிட்டனர்.
ஆவடி அருகே அண்ணனூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனை தூர்வாரக்கோரி பொதுமக்களும், சமூக ஆர்வலரும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருந்த போதிலும் பொதுப்பணித்துறையினர் ஏரியை தூர்வாராமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அடிக்கடி மழை பெய்யும் போது , ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீர் அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக ஜோதி நகரில் உள்ள 3 தெருக்களிலும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரி மீண்டும் நிறைந்து தண்ணீர் ஜோதி நகருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
தகவல் அறிந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் குடியிருப்புக்களில் சூழ்ந்த தண்ணீர் அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கனரக மோட்டர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருங்காலத்தில் ஏரி உபரிநீர் மக்களுக்கு எவ்வித பாதிப்பின்றி வெளியேற வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் மதுசூதனன் ரெட்டி, ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மேயர் கு.உதயகுமார், ஆணையர் ரா.சரண்யா, மண்டல குழுத்தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநகரப் பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், திமுக மாநகரச்செயலர் சண்.பிரகாஷ், மாநகராட்சி உறுப்பினர் வே.ஹரி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.