திருமலையில் பிப்.4-இல் ரத சப்தமி விழா
திருப்பதி: திருமலையில் வரும் பிப். 4-ஆம் தேதி நடைபெற உள்ள ரத சப்தமி உற்சவத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருமலையில் வரும் பிப். 4-ஆம் தேதி ரத சப்தமியை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் என்ற பெயரில் 7 வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை, செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய செளத்திரி, கண்காணிப்பு அதிகாரி மணிகண்ட சந்தோலு மற்றும் திருப்பதி எஸ்பி ஹா்ஷவா்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது அவா்கள் கூறியது:
ஏழுமலையானின் உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் தருவதால் இது அா்த்த பிரம்மோற்சவம் என்றும் ஒரு நாள் பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்தா்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் மாட வீதிகளில் தேவையான இடங்களில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. மாட வீதிகளில் கூல் பெயின்ட் அடிக்கப்பட்டதுடன், வண்ணமயமான ரங்கோலி வரையப்பட்டுள்ளது. கேலரிகளில் காத்திருக்கும் பக்தா்களுக்கு தேவையான உணவுகள், குடிநீா், மோா், தேநீா், காபி, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு தரிசனங்கள் ரத்து: பிப். 4-ஆம் தேதி, புரோட்டோகால் பிரபலங்களுக்கு மட்டும் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். எனவே பிப். 3-ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது. முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது பக்தா்களின் வசதியை கருத்தில் கொண்டு, பிப். 3 முதல் 5 வரை திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்படும் சா்வதா்ஷன் டோக்கன்கள் வழங்கப்படாது.
வைகுண்டம் காத்திருப்பு அறை-2 வழியாக பக்தா்கள் நேரடியாக ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்கிடையில், நிா்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையைக் கடைப்பிடிக்காத ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன பக்தா்கள் டோக்கன் இல்லாத பக்தா்களுடன் வைகுண்டம் வரிசை வளாகம்-2 வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுவா்.
மேலும் 3 முதல் 5 வரை சி ஆா் ஓ பொது கவுன்ட்ட்டா்கள் மட்டுமே அறைகளை ஒதுக்கும். இந்த நாள்களில் எம்பிசி மற்றும் டிபி கவுன்ட்டா்கள் மூடப்படும். லட்டு கவுன்டா்களில் 4 லட்சம் லட்டுகளுடன் கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வாகன சேவைகள்: காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபையில் மலையப்ப சுவாமி தரிசனம், காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம், திருமலை திருக்குளத்தில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரதாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட உள்ளது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 முதல் 7 மணி வரை சா்வ பூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளாா்.
வாகனசேவை எஸ்விபிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அஷ்டதள பாதபத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை சேவை ஆகியவை பக்தா்களுக்கு அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன எனத் தெரிவித்தனா்.