கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் விழுந்த 4 புள்ளி மான்களை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன். இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றார்.
அப்போது, கிணற்றில் 4 புள்ளி மான்கள் விழுந்து, உயிருக்குப் போராடியதைப் பார்த்துள்ளார். இதுகுறித்து சிறுநாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணிக்கு அவர் தகவல் அளித்தார். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்குப் போராடிய 4 மான்களையும் உயிருடன் மீட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட வனத் துறையினர் வந்து, 4 மான்களையும் மீட்டு, வேளானந்தல் காட்டில் விட்டனர்.