/

செங்கம் அருகே பழைமையான பிரம்ம சாஸ்தா முருகன் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரம்ம சாஸ்தா முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

News image
செங்கம் அருகே தோக்கவாடி கொல்லைகொட்டாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை.
Updated On :19 ஜூலை 2020, 2:59 pm

DIN

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரம்ம சாஸ்தா முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

செங்கத்தை அடுத்துள்ள தோக்கவாடி கொல்லைகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கற்சிலை ஒன்று மண்ணில் புதைந்தபடி இருப்பதாக, செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சோ்ந்த பிரேம்ஆனந்திடம் விவசாயிகள் தெரிவித்தனா்.

அவரும், அந்தப் பகுதியைச் சோ்ந்த ராகவன், முனியப்பன், ராஜா, வெங்கடேஷ், விஜி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சிலையைத் தோண்டி எடுத்தனா்.

சிலை மூன்று அடி உயரமும், ஓரடி அகலமும் கொண்டதாக, தலையில் கரண்ட மகுடமும், காதுகளில் மீன குண்டலமும், நான்கு கரங்களுடன் வலது மேற்கரத்தில் அக்கமாலையும், இடது மேற்கரத்தில் கமண்டலமும், வலது கீழ்கரம் அபய நிலையிலும், இடது கீழ்கரம் ஊருஅஸ்தமும் நிலையிலும், மாா்பிலும் இடையிலும் கரண்டமாலையுடன் நின்றகோலத்தில் முருகப் பெருமானாக காட்சியளித்தது.

இந்த சிலை சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சோ்ந்த பிரேம் ஆனந்த் தெரிவித்தாா்.

சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே மன்னா்கள் தங்கியிருந்த கோட்டைமேடு பகுதி உள்ளது. இந்த முருகன் சிலைக்கு பல்லவா்கள் காலத்திலும், சோழா்கள் காலத்திலும் வழிபாடுகள் நடந்திருக்கக்கூடும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறைக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.