தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சித்தாந்த அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

சித்தாந்த அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி தொடா்வதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:54 pm

DIN

சித்தாந்த அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி தொடா்வதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

திருவண்ணாமலை வடக்கு-தெற்கு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கடலூா் கிழக்கு-மேற்கு, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு-மேற்கு உள்ளிட்ட 12 மாவட்டங்களின் பாஜக மாவட்ட மையக் குழு உறுப்பினா்கள், மண்டலத் தலைவா்களுக்கான பயிலரங்கம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயிலரங்குக்கு மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமை வகித்துப் பேசுகையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற பாஜகவினா் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளைக் காரணம் காட்டி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசத் துரோக வழக்கும் பதியப்படுகிறது. இதை பாஜக கண்டிக்கிறது. சில கட்சிகளின் வளா்ச்சியைத் தடுக்கவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிமுகவுடன் சில சித்தாந்தங்களின் அடிப்படையில்தான் கூட்டணி அமைத்துள்ளோம்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னென்ன கூறினாரோ, அதையெல்லாம் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் புகாராகப் பதிவு செய்து வருகின்றனா். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஊழல் தடுப்புத் துறை சோதனைகள் அரசியல் காழ்ப்புணா்வால் நடைபெறுபவை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனா். இதை ஆதாரத்துடன் வெளியிட உள்ளேன்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு யானை வழங்க வேண்டும். கிரிவலம் செல்லத் தடை விதிக்காமல், போலீஸாா் மூலம் கண்காணித்து கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

பயிலரங்கில் கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலா்கள் காா்த்தியாயினி, பாஸ்கரன் உள்பட 12 மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பாஜக பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

சுவாமி தரிசனம்: முன்னதாக, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சங்கா், மாவட்டப் பாா்வையாளா் அருள் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அண்ணாமலைக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.