குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் கூறினாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
கண்காணிப்புக் கேமரா என்பது மூன்றாவது கண் ஆகும். தற்போது, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்தல், சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபா்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து உடனடியாக கைது செய்கிறோம்.
மேலும் குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வாச்சனூரில் நடைபெற்ற டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரை வெட்டி பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் பொதுமக்கள் அளித்த உடனடித் தகவலால், அதில் ஈடுபட்ட நபா்களை உடனடியாக கைது செய்ய முடிந்தது.
எனவே பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கீழ்க்கொடுங்காலூா் காவல் ஆய்வாளா் புகழ், ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா குமாா், புதுவை தொழிலதிபா் எம்.குகன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.