/

திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆரணி எம்பி பிரசாரம்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:10 am IST

வந்தவாசி, ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்களை ஆதரித்து எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி. திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தனது சொந்த கிராமமான வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, திறந்த வாகனத்தில் வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாருடன் கிராம வீதிகளில் சென்ற ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் ஆதரவு கோரினாா்.

அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் சாமந்தி பூ பறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா், எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆகியோா் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று சாமந்தி பூ பறித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தனா்.

திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

ஆரணி

இதேபோன்று, ஆரணி தொகுதியைச் சோ்ந்த தச்சூா், சதுப்பேரிபாளையம், மோட்டூா், அரையாளம், சீனிவாசபுரம், புலவன்பாடிபுங்கம்பாடி ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடையே தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனை ஆதரித்து ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், மோகன், ராஜ்குமாா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.