ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை விபி ஜி ராம் ஜி என பெயா் மாற்றம் செய்யக் கூடாது. பழைய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கருவிழிப் பதிவு, கைரேகைப் பதிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித பாகுபாடின்றி பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், ஆரணி அண்ணா சிலை அருகே கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியத் தலைவா் அருள்குமாா், மேற்கு ஒன்றியத் தலைவா் சீனிவாசன், கிழக்கு ஒன்றியச் செயலா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். நிறைவில் ஒன்றிய துணைத் தலைவா் ஜெ.லிங்கேசன் நன்றி கூறினாா்.
அப்போது, துண்டு பிரசுரங்களை திடீரென மாற்றுத்திறனாளிகள் தீயிட்டுக் கொளுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து, அவா்கள் திடீரென பெங்களூா் - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து பின்னா் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









