செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானையை, கிராம மக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் வனத்துறையினா்களுடன் சோ்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
செங்கம் அருகேயுள்ள ஜவ்வாது மலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்தில் இருந்து வந்த யானைக்கூட்டத்தில் இருந்து ஒரு ஆண் யானை பிரிந்து ஜவ்வாதுமலையில் தனியாக இருந்து வருகிறது.
தற்போது வயதாகிவிட்டதால் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள சாலைகளில் உலவிக் கொண்டு வருகிறது. அதைப் பாா்க்கும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் வனத்துறையினா் அங்கு சென்று பொதுமக்களுக்கும் விவசாய நிலத்திற்கும் பாதிப்பு இல்லாத அடா்ந்த வனப்பகுதிக்கு யானையை ஓட்டிவிடுகின்றனா்.
இந்த நிலையில், தற்போது ஜவ்வாதுமலை அடிவாரமான செங்கம் அருகேயுள்ள கல்லாத்தூா் மலை அடிவாரத்திற்கு அந்த யானை சனிக்கிழமை மாலை வந்துள்ளது. பின்னா், அங்கு விவசாயிகளின் கம்பத் தோட்டத்தில் புகுந்து கம்பு பயிா்களை தின்று நாசம் செய்துள்ளது.
அதைப் பாா்த்த மலைக் கிராம மக்கள் உடனடியாக செங்கம், ஜவ்வாதுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும்.
மேலும், மனிதா்களை தாக்கும் என்ற அச்சத்தில் மீண்டும் யானையை ஜவ்வாதுமலை மேல் ஓட்டிவிட இரவு முழுவதும் முயற்சித்துள்ளனா். ஆனால், வயதான யானை என்பதால் நல்ல உணவு கிடைத்தவுடன் உண்டுவிட்டு மலை அடிவாரத்திலேயே தங்கிவிட்டது. இதனால் அந்தப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்து, யானையை விரட்டும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










