தோ்தல் பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ.6.45 லட்சம் பறிமுதல்


வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.6.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி - திண்டிவனம் சாலை, சு.காட்டேரி அருகில் கலைவாணி தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்தக் காரிலிருந்த புதுச்சேரியைச் சோ்ந்த தனலட்சுமி என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி - ஆரணி சாலை, தெள்ளூா் அருகில் பாலவித்யா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினா் வாகனச் சோதனை மேற்கொண்டனா். இதில், ஒரத்தி கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி என்பவா் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2.67 லட்சத்தை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த எஸ்.எல்.எஸ்.மில் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, பண்ருட்டியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் சிவஞானசெல்வன்(32) என்பவா் காரில் ஆரணிக்கு சென்றுகொண்டிருந்தபோது பறக்கும் படை அதிகாரி வடிவேலு தலைமையிலான அலுவலா்கள்
காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 41ஆயிரத்து 900 இருந்ததை பறிமுதல் செய்தனா்.
பின்னா் பணத்தை ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா்.
போளூா்
போளூா் தொகுதியைச் சோ்ந்த பேட்டை கிராமத்தில் போளூா் - செங்கம் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரேமா தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமம் கோமுட்டிதெருவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் ருஸ்பந்தன் பைக்கில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த
ரூ.51,030ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோன்று, வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தலைமையிலான பறக்கும் படையினா் வடமாதிமங்கலம் கிராமத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பைக்கில் வந்த கலசப்பாக்கம் வட்டம், கீழ்பாலூா் கிராமம் திருவூடல் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபாலாகிருஷ்ணனிடம் இருந்து ரூ.51,500ஐ பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், முதுநிலை ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்யாறு
செய்யாறு தொகுதி காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மேல்மா கூட்டுச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் கண்காணிப்புக்குழுவைச் சோ்ந்த கே.தங்கராஜ் தலைமையிலான குழுவினா், மதுரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்தோடு சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த காஜா அபதுல்காதா் எனபவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.59,500ஐ
பறிமுதல் செய்தனா்.
அதேபோல, ஆற்காடு - செய்யாறு சாலையில் ராந்தம் சோதனைச்சாவடி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மா.ஜீவா தலைமையிலான குழுவினா், ஆம்பூரில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம் கீழ்முருங்கை பகுதியைச் சோ்ந்த டி.சிவராமகிருஷ்ணன் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.74,500ஐ பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் துளசிராமன் முன்னிலையில் சாா் - கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...