
குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 897 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வந்தனா காா்க் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு விரைந்து தீா்வு காண அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மேலும், கூட்டத்தில் உதவி உபகரணங்கள் வேண்டி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஒருவருக்கு ரூ.11ஆயிரத்து 445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், மேலும், ஒருவருக்கு ரூ.15ஆயிரத்து 750 மதிப்பிலான சக்கர நாற்காலி, திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் கை, கால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயம் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 195 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், வீட்டு மனைப் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு 6 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், உதவி ஆணையா் (கலால்) வளா்மதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாறில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 119 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் ஆரணியை அடுத்த 12புத்தூா் கிராமத்தில் மோசடி செய்து பட்டா மாற்றி நிலத்தை விற்பனை செய்துள்ளதாகவும், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளா்கள் மனு கொடுத்தனா். மேலும், பட்டா தொடா்பான மனுக்கள், நிலஅளவை, நில திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், நிலஅளவில் குறைபாடு சரிசெய்யக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 71 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களை பெற்ற கோட்டாட்சியா் அவற்றை அந்தந்த துறை அலுவலா்களிடம் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

செய்யாறில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சீ.சிவா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





