கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரைத் தாக்கிவிட்டு லாரியில் மணல் கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் வட்டம், மோட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வேலூர் வட்டாட்சியர் பாலாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மோட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கிராம உதவியாளர் பரத்குமார் ஆகியோர் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது, கம்மவான்பேட்டை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபிக்குச் சொந்தமான லாரியில் 2 யூனிட் மணல் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. அதை கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை ஆகியோர் தடுக்க முயன்றனர்.
அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் இருவரையும் தாக்கிவிட்டு மணலுடன் லாரியை எடுத்து சென்று விட்டனராம். இச்சம்பவத்தை அடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதற்காக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.