உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மூக்கனூர், கொத்தபேட்டையில் எருது விடும் விழா: 35 பேர் காயம்

ஜோலார்பேட்டை அருகேயுள்ள மூக்கனூர் கிராமத்திலும், வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டைபகுதியிலும்

News image

மூக்கனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை. 

Updated On :24 ஜனவரி 2019, 2:50 am IST


ஜோலார்பேட்டை அருகேயுள்ள மூக்கனூர் கிராமத்திலும், வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டைபகுதியிலும் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமானோர் உற்சாகமாகப் பங்கேற்றனர். எனினும், எருதுகள் முட்டியதிலும், கூட்ட நெரிசலிலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூக்கனூர் கிராமத்தில் 48-ஆம் ஆண்டாக எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 278 காளை மாடுகள் பங்கேற்றன. முன்னதாக, அந்தக் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். 
போட்டியில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த திருப்பத்தூர் வடுகமுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த காளைக்கு இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 25 பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
எருது விடும் விழாவின்போது காளைகளைச் சீண்டிய 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அப்பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். வேலூர் மாவட்ட சார்-ஆட்சியர்(முத்திரைக் கட்டணம்) தினகரன் மற்றும் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கொத்தகோட்டையில்....
வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டையில் செவ்வாய்க்கிழமை எருது விடும் விழாவில் 160-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகள் விழாவில் கலந்து கொண்டு ஓடின. இலக்கை அதிவேகமாக ஓடிக் கடந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.50,555 வழங்கப்பட்டது. மேலும், அந்தக் காளைக்கு அமைச்சர் நிலோபர் கபீல் ஒரு சவரன் தங்கக் காசை பரிசாக வழங்கினார். இரண்டாவது பரிசாக ரூ.40,444, மூன்றாவது பரிசாக ரூ.30,333 உள்பட 25 பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதனிடையே, காளைகள் முட்டியதிலும், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதிலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.