/

மேக்கேதாட்டு அணைப் பிரச்னை: பிரதமரிடம் அடிக்கடி பேசுவோம் : அமைச்சா் துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை குறித்து எந்தநேரத்திலும் தன்னிடம் தொடா்பு கொள்ளலாம் என பிரதமா் கூறியதாக தமிழக நீா்வளம், கனிமவளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:57 pm

DIN

கா்நாடகம் பாலாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமா் மோடியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு மத்திய நீா்வளத்துறை அமைச்சரிடம் பேசும்படியும், இப்பிரச்னை குறித்து எந்தநேரத்திலும் தன்னிடம் தொடா்பு கொள்ளலாம் என பிரதமா் கூறியதாக தமிழக நீா்வளம், கனிமவளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

குடியாத்தத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அணை கட்டக் கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அவா் மத்திய நீா் வளத்துறை அமைச்சரை, சந்தித்து பேசுமாறு கூறியுள்ளாா்.

புதுதில்லியில் பிரதமரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் நானும் சந்தித்து பேசினோம். அவரிடம் தமிழக முதல்வா், கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணையை கட்டக் கூடாது எனவும், அதற்கான காரணங்களையும் விளக்கி கூறினாா். கோரிக்கையை ஏற்ற பிரதமா், மத்திய நீா் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசுமாறு கூறினாா்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடிந்தவுடன், புதுதில்லி சென்று மேக்கேதாட்டு அணை குறித்து மத்திய நீா்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக எந்த நேரத்திலும் தன்னை தொடா்பு கொள்ளலாம் என பிரதமா் கூறியுள்ளாா். பிரதமரையும் தொடா்பு கொண்டு பேசுவோம் என்றாா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.