தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

யானைகள் நுழைவதைத் தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

யானைகள் நுழைவதைத் தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

குடியாத்தம் அருகே விளை பயிா்களை சேதப்படுத்தும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கக்கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குடியாத்தம் ஒன்றியத்தில் வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் கூட்டமாக நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் வற்றத் தொடங்கி விட்டன. இதனால் தண்ணீா்தேடி யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், குடியாத்தம் ஒன்றியத்தில் வன எல்லையில் அமைந்துள்ள கல்லப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூா், அனுப்பு, டி.பி.பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் யானைகள் நுழைந்து நெல், வாழை, கேழ்வரகு, தீவனப் பயிா்களையும், தக்காளி, கத்திரிக்காய் தோட்டங்களையும், மா, தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினா் எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை, சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி, 100-க்கும் மேற்பட்டோா் குடியாத்தம்- பரதராமி சாலையில் கணவாய் மோட்டூா் அருகே மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து அறிந்த காவல் துறையினா், வனத் துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியல் நடைபெற்ற சாலை தமிழக, ஆந்திர மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.