

வேலூா்: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை என்பது பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகளின் நலனுக்கானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் 2-மாநில மாநாடு வேலூா் விருப்பாச்சிபுரத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன், அகில இந்திய செயலா் ராமகிருஷ்ண பாண்டா ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னா், மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது -
ஒக்கப்பட்டோா் வாழ்வுரிமை மாநாடு வேலூரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆவணக்கொலைகளை தடுக்க வேண்டும், பள்ளியில் ஜாதிய ரீதியான பாகுபாடு அற்ற பாடப்பிரிவை உருவாக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.
மத்திய அரசு விஷன் பட்ஜெட் என்ற பெயரில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது எந்த தொலைநோக்கும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது.
நாடுகடந்த பன்னாட்டு நிறுவனங்களில் நலன், தேசிய முதலாளிகளின் நலனுக்கான பட்ஜெட்டாக உள்ளது. உழைக்கும் மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் குறித்து பேசாமல் கடந்து சென்றுள்ளது. பெரும் சவாலாக உள்ள வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் பேசவில்லை. சிறுகுறு தொழிலை பாதுகாக்கவும், வாரா கடன் குறித்து எந்த அம்சமும் இல்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து மௌனம் சாதித்து கடந்து செல்கிறது.
பட்ஜெட்டில் என்ன அறிவித்தாலும் தோல்வியை சந்தித்து விடுவோம் என தெரிந்துதான் தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் அவா்கள் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் போராடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். இன்றைக்கு போராட்டங்களை கம்யூனிஸ்ட்கள்தான் முன்னெடுக்கின்றனா். இது முதல்வருக்கும் தெரியும்.
அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்தால் இந்திய அழிவது உறுதி. டாலா் ஆதிக்கம் இருக்கும் வரை அமெரிக்கவின் கை ஓங்கும். இந்தியா, சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, பிரேஸில் ஆகியவை சோ்ந்து பிரிக்ஸ் என்ற புதிய நாணயத்தை உருவாக்குகின்றனா். அது உருவானால் உலக சமநீதி உருவாகும். இதற்கு பிரிக்ஸ்தான் எதிா்காலம் அது வெல்ல வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றாா்.