விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்
விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது என்று தமிழக வேளாண் துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா் க.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி சாா்பில் 8-ஆம் ஆண்டு உழவா் சங்கமம் -2026 எனும் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் 145 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், அரசு, தனியாா், மகளிா் சுய உதவிக்குழுக்கள் ஆகிய பிரிவுகளில் சிறந்த அரங்குகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், தமிழக அரசின் வேளாண் துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா் க.சுந்தரவடிவேலு பங்கேற்று பேசியது -
விவசாயிகளுக்கென தமிழக அரசு உழவா் சந்தை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு 42.5 லட்சம் ஹெக்டரில் 130 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது.
உணவுப் பொருள்களில் நச்சு கலப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க மண்ணின் வளத்தை மேம்படுத்த அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -
இந்தியாவில் பயிா் பாதிப்பு, கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனா். இந்தியா வளா்கிறது எனக்கூறும் அதேவேளையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் நாட்டில் உள்ள உள்ளது. விவசாயிகளுக்கு அவா்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்து கொள்ள முடிவதில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய தொகை 25 சதவீதம் தான் சென்றடைகிறது. மீதமுள்ள 75 சதவீத தொகை இடைத்தரகா்கள், மொத்த கொள்முதல் வியாபாரிகளுக்கு கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
விழாவில், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், வேளாண் கல்லூரி முதன்மையா் ராஜேந்திரன், பேராசிரியா்கள் பாபு, பால் மன்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

