ஈரோடு, செப். 20: ஈரோட்டில் செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் நூல் வெளியீட்டு விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.
செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெ.சுத்தானந்தன் பிறந்த நாளையொட்டி, தில்லைநகர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இவ்விழாவுக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கப் புரவலர் பி.எஸ்.நடராஜன் தலைமை வகிக்கிறார்.
செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் நூலை, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு ஆணைய முன்னாள் தலைவரும், நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன் வெளியிட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் பெற்றுக் கொண்டு, ஜெகநாதன்-முத்துலட்சுமி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறார்.
ஏழை மாணவர்களுக்கு ஜெ.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையை திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் வழங்குகிறார்.
செங்குந்தர் சமுதாயம் சார்பில் "ஆத்மா' மின் மயானத்துக்கு வழங்கப்படும் நிதியையும், ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஈ.கே.சகாதேவன் பெற்றுக் கொள்கிறார். செங்குந்தர் கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை வழங்குகிறார். செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.இராசு பேசுகிறார்.
ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.