ஈரோடு, மார்ச் 15: இரவில் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படாததால், தினமும் கண் விழித்துக் காத்திருக்கும் பரிதாபமான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மின் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் மற்றும் பிற தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2010 மார்ச் மாதத்திலிருந்து மின்விநியோகம் சீராகிவிடும் என்று கடந்த ஆண்டு இத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தெரிவித்த மார்ச் மாதத்தில்தான் வழகத்தை விட மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 75 சதவீத விவசாயம் கிணற்றுப் பாசனத்தையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நாள்தோறும் 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களிலும் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள், தங்களின் ஒருபகுதி நிலத்தில் பயிரிட்டு வந்தனர். ஆனால் மின்தட்டுப்பாடு தொடங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடக்கத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் தலா 8 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
இதன்பிறகு இரவில் 8 மணிநேரம், பகலில் 6 மணிநேரமாக குறைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்முனை மின் விநியோக நேரம் மேலும் குறைக்கப்பட்டு இரவில் 6 மற்றும் பகலில் 6 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு மும்முனை மின்சார விநியோக நேரத்தை குறைக்கும்போது, இதுகுறித்து அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது. இதன்மூலம் இரவு நேர மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படவில்லை.
ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் விநியோகம் செய்யப்படும் மும்முனை மின்சாரம், 3 மணி நேரமாக குறைக்கப்பட்டு விட்டது. 6 மணி நேர மின் விநியோகம் இருந்தபோது இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. 3 மணி நேரமாக குறைக்கப்பட்ட பிறகு இரவு எத்தனை மணிக்கு மின்சாரம் வழங்கப்படும் என்பதை மின்வாரியம் அறிவிக்கவில்லை. இதனால் இரவு நேரத்தில் மும்முனை மின்சாரம் வரும் நேரத்தை எதிர்பார்த்து விவசாயிகள் கண்விழித்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமியிடம் கேட்டபோது, தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால், இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதால் பயிர்களுக்கான தண்ணீர் தேவை குறைகிறது. இதன்மூலம் வழக்கத்தைவிட கூடுதல் நிலம் பாசன வசதி பெறும். இந்த சமயத்தில் இரவில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இரவில் வழங்கப்பட்டு வந்த 6 மணி நேர மும்முனை மின்சாரம், பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 4 மணி நேரமும் முழுமையாக மும்முனை மின்சாரம் வழங்க முடியவில்லை. மும்முனை மின் விநியோக நேரம் குறைக்கப்பட்டுள்ள அறிவிப்பை வாரியம் அறிவிக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை மின் விநியோகத்தைப் பொறுத்தவரை வரும் ஜூன் வரை இந்த நிலையே நீடிக்கும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.