திருப்பூர், செப். 27: கோடிக் கணக்கில் செலவுசெய்து கட்டப்பட்ட திருப்பூர் தாட்கோ தொழிற்பேட்டையில் தொழில் துவங்க ஆதிதிராவிட தொழில் முனைவோர் முன்வராததால், அக் கட்டடங்கள் வீணாகின்றன.
÷ஆதிதிராவிடர் இன தொழில்முனைவோரை ஊக்குவிக்க திருப்பூரை அடுத்த முதலிபா ளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 10 கோடி செலவில் தாட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இத் தொழிற்பேட்டையில் 100 தொழிற்கூடங்கள் உள்ளன.
÷முழுவதும் பின்னலாடைத் துணி உற்பத்தி (நிட்டிங்) தொழிலுக்கென்று அமைக்கப்பட்ட இத் தொழிற்பேட்டையில் தொழில் துவங்க முன்வரும் ஆதிதிராவிடர்களுக்கு மாவட்ட தொழில் மையம் 15 முதல் 20 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது.
÷ஆரம்பத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மட்டுமே இயந்திரங்கள் மீது கடன் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடன் பெற்று தொழில் துவங்கிய 54 ஆதிதிராவிட தொழில் முனைவோரால் தொடர்ந்து தொழில் நடத்த முடியாததால், அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
÷அதைத் தொடர்ந்து, தாட்கோ தொழிர்பேட்டையில் தொழில் துவங்குவோருக்கு கடன் வழங்குவதை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிறுத்திக்கொண்டது. அவர்கள் வேறு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள அரசு அனுமதியளித்தது.
÷இருப்பினும், முதலிபாளையம் தாட்கோ தொழிர்பேட்டையில் தொழில் துவங்க ஆதிதிராவிடர்கள் முன்வருவதில்லை. அதற்கு, ஆதிதிராவிட தொழில் முனைவோருக்கு திருப்பூர் தொழில்துறையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
÷இத் தொழிற்பேட்டையில் தொழில் துவங்கிய 54 பேரில் 27 பேர் தொழிலை விட்டே விலகிவிட்டனர். தற்போது தொழில்புரிபவர்களும் போதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.
÷பின்னலாடைத் துணி உற்பத்தி (நிட்டிங்), உபதொழில் என்பதால் ஆடை உற்பத்தியாளர்களைச் சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. திருப்பூர் உற்பத்தியாளர்கள் மத்தியில், அவர்களின் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் தொழில்புரியும் நிட்டிங் ஜாப்ஒர்க் நிறுவனத்தினருக்கு மட்டுமே ஒத்துழைப்பு கிடைக்கிறது.
÷தாட்கோ தொழிற்பேட்டையில் தொழில்புரியும் ஆதிதிராவிட ஜாப்ஒர்க் நிறுவனர்களுக்கு அத்தகைய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. சில உற்பத்தியாளர்கள் ஆர்டர் கொடுத்தாலும் அதற்கான உற்பத்திக் கட்டணத்தை வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் செய்துவிடுகின்றனர். இதனால், ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படுகிறது.
÷இதுபோன்ற பல காரணங்களால், தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் ஆதிதிராவிட தொழில்முனைவோர் தொழிலைவிட்டு விலகுகின்றனர் என்றார் தாட்கோ தொழிற்பேட்டையில் தொழில்துவங்கி பாதிக்கப்பட்ட ஒருவர்.
÷தொழில்முனைவோர் தொடர்ந்து விலகுவதாலும், புதிய தொழில்முனைவோர் முன்வராததாலும் தாட்கோ தொழிற்பேட்டை கட்டடங்கள் ஆண்டுக்கணக்கில் வீணாகி வருகின்றன. அங்குள்ள தொழிற்கூட கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கோடிக் கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் திருடப்படுகின்றன.
÷தொழில் நகரான திருப்பூர் பகுதியில் போதிய திறமைகளும் வாய்ப்புகளும் இருந்தும் குறைந்த வாடகையில் கட்டடங்கள் கிடைக்காததால் தொழில் முனைவோர் பலர் தொழில் துவங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். அத்தகைய தொழில் முனைவோரை இனம்கண்டு தாட்கோ தொழிற்கூடங்களில் தொழில் துவங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
÷தவிர, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் தாட்கோ கட்டடங்கள், இயந்திர தளவாடப் பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.