மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இயந்திரங்கள் வாங்குமிடத்திலேயே மானியம் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும் என கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கோப்மா தலைவர் கே.மணிராஜ் வெளியிட்ட செய்தி: சிறு குறுந்தொழில் முனைவோர் வாங்கும் இயந்திரங்களின் மதிப்பில் அரசு வழங்கும் மானியத் தொகை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தொழில் மையம் மூலமாக மானியம் பெறுவதில் அரசின் சில நடைமுறை சட்ட விதிகளால் காலதாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் இயந்திரங்கள் வாங்கப்படும் இடங்களிலேயே பில் தொகையில் மானியம் பெறுவதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.
மின்வெட்டு அதிகரித்துள்ள இச்சூழ்நிலையில் தொழில் முனைவோர்களுக்கு உதவ ஜெனரேட்டர் மானியத் தொகையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மானியத் தொகையை ஜெனரேட்டர் விநியோகஸ்தர் மூலமாக பில் தொகையில் பெறுவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் சூழ்நிலையில் அடுக்குமாடி தொழில் வளாகங்களை அமைக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு அமைக்கும்போது சிறு குறுந்தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நலிவடைந்த சிறு-குறு பம்ப்பெட் உற்பத்தியாளர்கள் மற்றும் வயதான ஏழைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பம்ப்செட் நல வாரியம் அமைக்க வேண்டும். கோவையில் உள்ள தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க முதல்வர் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








