சாலை விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோவை மாநகரில் நிகழாண்டில் சாலை விபத்துகளில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
Updated on
2 min read

கோவை மாநகரில் நிகழாண்டில் சாலை விபத்துகளில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன.

கோவை மாநகரில் 2015-இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 254 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துகள் தொடர்பாக நிகழாண்டு ஜனவரி முதல் மே 23-ஆம் தேதி வரை மட்டும் 542 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அவிநாசி சாலை, திருச்சி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், விமான நிலையம், காளப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோவை கிழக்குப் பிரிவு காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை விபத்து தொடர்பாக 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 71 பேர் இறந்துள்ளனர்.

போக்குவரத்து மேற்குப் பிரிவு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளான உக்கடம், பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதான சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதற்குக் காரணம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதும், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாததுமே ஆகும். மேலும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இரவு நேரங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிவேகமாகச் செல்வதாலும் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் விருந்துகளில் கலந்து கொண்டுவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டிவருவதும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

சாலை விபத்துகளில் பாதிப்பைக் குறைக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) ஆர்.சிவகுமார் கூறியதாவது: கோவை மாநகரில் காந்திபுரம் முதல் விமான நிலையம் வரை குறிப்பிட்ட நேரங்களில் வாகனங்கள் சென்றடைய கிரீன் சிக்னல் என்ற திட்டம் முன்னர் தொடங்கப்பட்டபோது, அவிநாசி சாலையில் இருந்த வேகத் தடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் வரை சுமார் 30-க்கும் மேற்பட்ட குறுக்குச் சாலைகள் உள்ளன. இதற்கு அருகே உள்ள சிக்னல்களில் வேகத் தடையை அமைத்து, விபத்துகளைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சிக்கு விரைவில் பரிந்துரை அனுப்பப்படும். இந்தப் பரிந்துரைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அவிநாசி மற்றும் திருச்சி சாலைகளில் உள்ள சிக்னல்களில் வேகத் தடை அமைக்கப்படும். மேலும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றினால் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என்றார்.

சாலை விபத்துகளைக் குறைத்து உயிரிழப்பைத் தடுக்க வேகத் தடைகள் அமைப்பதோடு, சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும், மின்னல் வேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் மீதும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com