சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கியதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலம், சுனங்காட் பகுதியைச் சேர்ந்தவர் நவநீத் (22). இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடந்த மே 15-ஆம் தேதி நவநீத் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, தருமபுரி அருகே சாலை விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையில் நவநீத் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நவநீத் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை புதன்கிழமை அகற்றப்பட்டு சென்னை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன.
கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற இதயம்:
அவற்றில் இதயம், சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்குத் தானமாக அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மருத்துவர்கள் கோவைக்குச் சென்று இதயத்தைத் தானம் பெற்று வந்தனர். கோவையில் இருந்து விமானம் மூலம் காலை 11.10 மணிக்குப் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்தை 11.40 மணிக்கு வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினர் "க்ரீன் காரிடார்' முறையைப் பின்பற்றி போக்குவரத்தைக் கையாண்டனர். நண்பகல் 12.05 மணிக்கு இதயம் அடையாற்றில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.