சிறுமுகை ஸ்ரீ அம்பாள் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பள்ளியின் அலெக்ஸாண்ரைட் அணி அதிக புள்ளிகள் எடுத்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவுக்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் வேலுசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சந்திரன் வரவேற்றார்.
இதில் நடைபெற்ற கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, நீளம்-உயரம் தாண்டுதல், கபடி, கோ-கோ, ஓட்டப் பந்தயம் உள்பட தடகளப் போட்டிகளில் பள்ளியைச் சேர்ந்த பெரில், மார்க்கனைட், அலெக்ஸாண்ரைட், லேபிஸ்லாஜூலி ஆகிய அணிகளிலிருந்து 1200 மாணவர், மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
போட்டிகளை உடல்கல்வி ஆசிரியர்கள் பிரதீப், அருண்குமார், ஜெயப்ரகாஷ், சுதாகர், கவிதா, தீபா ஆகியோர் நடத்தி வைத்தனர்.
இறுதியில் அதிக புள்ளிகள் எடுத்து அலெக்ஸாண்ரைட் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. நான்கு அணிகளிலிருந்தும் கார்த்திக்கிஷோர், சுகந்தகுமார், ஜெப்ரிஜேம்ஸ், பிரவீன், ரக்ஷனா, தாரிகா, காவியா, ஹேமதர்ஷினி, அமிர்தவர்ஷினி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கும், தனிநபர் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்,மாணவிகளுக்கும் பள்ளித் தாளாளர் பழனிசாமி பரிசு கோப்பை மற்றும் விருதுகளை வழங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் அனுசுயா நன்றி கூறினார்.