சிட்டிசன் வாய்ஸ் கிளப் சார்பில் இன்றைய சூழ்நிலையில் சுற்றுப்புறச்சூழலின் முக்கியத்துவம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை குறித்து இலவச பயிற்சி வகுப்பு மே 12- ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை, திருச்சி சாலையில் உள்ள விவேகாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் குடியிருப்பு சங்கங்கள், மாணவர்கள், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசிகள் என முதலில் பதிவு செய்யும் 50 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து வழக்குரைஞர் மார்ட்டின் பயிற்சி அளிக்கிறார். ஊழல் தடுப்புச் சங்கத்தின் ச.ஓ.வேலு, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஜார்ஜ், சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் ஜெயராமன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நுகர்வோர் சட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள், பயன்கள் மற்றும் உரிமைகள் குறித்து பயிற்சியளிக்க உள்ளனர். வகுப்பில் கலந்து கொள்வோருக்கு பயிற்சி குறித்த நூலும் வழங்கப்படும்.
அரசியல் சார்பற்ற மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூகசேவை செய்யும் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொள்ள மே 5- ஆம் தேதிக்குள் citizensvoiceclub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், கட்செவி மூலம் 9443041105 என்ற எண்ணுக்கும் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.