கடந்த 10 தினங்களாகப் பெய்த மழை காரணமாக, வால்பாறை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் நிர்வாகத்தினரும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறையின் உயிர்நாடியாக விளங்கும் தொழில் தேயிலை சாகுபடி. வேறு எந்த ஒரு மாற்றுத் தொழிலும் இல்லாததால், இதனை நம்பியே இப்பகுதி மக்களும் வியாபாரிகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வால்பாறையில் கடும் வெயில் நிலவியது. இதனால் தேயிலைச் செடிகளில் இலைகள் கருகியும், பல்வேறு நோய்கள் தாக்கியும் உற்பத்தி வெகுவாக பாதித்தது. தொழிலாளர்களுக்கு போதுமான வேலை கிடைக்காததால், அவர்களுக்கும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 தினங்களாக எஸ்டேட் பகுதியில் பெய்த தொடர் மழையால், தேயிலைச் செடிகளில் துளிர்விடத் துவங்கி தற்போது தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சில எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காலை 6 மணிக்கே சென்றும், மாலை கூடுதல் நேரம் பணி புரிந்தும், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு, ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்து லாரிகள் மூலம் கோவை, கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஏல மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.