சூலூர் பள்ளியில் தொடர்ந்து தீவைப்பில் ஈடுபட்ட இளைஞர் பிடிபட்டார்.
சூலூர் தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் பள்ளி விடுமுறை நாளில் திடீரென்று பள்ளியில் புகுந்த மர்மநபர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பள்ளி அறையில் புகுந்து அங்குள்ள கணினி, நாற்காலிகள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சமையல்கூடப் பொருள்களையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக சூலூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில்,
அதே பள்ளியில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து பள்ளிக்கூட அறைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தால் பள்ளிக்குச் சொந்தமான மர நாற்காலிகள், பிளாஸ்டிக் மேஜைகள், இலவச சீருடைகள், காலணிகள் என சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தனர். மேலும், ஆசிரியர், பெற்றோர் மற்றும் அப் பகுதி பொதுமக்கள் பள்ளியில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியின் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், சூலூர் வட்ட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், லெனின் அப்பாதுரை, பயிற்சி உதவி ஆய்வாளர் ஜான் ஜினியன் சிங் மற்றும் தனிப் பிரிவு காவலர் செந்தில்குமார் ஆகியோர் தீவைத்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தீ வைத்த நபர் குறித்து ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதன்பேரில், சூலூர், கோபால் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த முருகநாதன் மகன் எம்.சதீஷ்குமார் (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போலீஸாரிடம் கூறுகையில் சூலூர், செங்கதுரை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும், விளையாட்டுத் தனமாக தீ வைத்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
அவரை சூலூர் நீதிமன்ற குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்த போலீஸார் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சூலூர் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இளைஞர் கைது: சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வீதியில் அரிசி கடை வைத்திருப்பவர் சுப்பிரமணி.
இவரது கடையில் கடந்த 19 ம் தேதி மர்மநபர் ஒருவர் பணத்தை திருட முயற்சித்தாராம். சுப்பிரமணியைப் பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்துவந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை சூலூர் படகுத்துறைப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜான்சிங் சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தார்.
அதில் அவர் கடலூர் மாவட்டம், நாச்சியார் கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிவேல் (22) என்பது தெரியவந்தது. இவர் படகுத்துறைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நான்கு ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவருக்குத் திருமணமாகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் பிடிபட்டார். அவரை சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்த போலீஸார் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








