வாழை இலை விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோவையில் ஒருங்கிணைந்த சந்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மேட்டுப்பாளையம், சோமனூர் மற்றும் நொய்யல் படுகை பகுதிகளில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 முதல் 3 லட்சம் வாழை இலைகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக் காலங்களில் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
தற்போது பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்த பிறகு சிறு உணவகங்களிலும் வாழை இலைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே வாழை இலைகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே வாழை இலை விற்பனைக்கு என ஒருங்கிணைந்த சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இலை வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இலைகளை வியாபாரிகளே நேரடியாக அறுத்து எடுத்துக் கொள்கின்றனர். 100 இலைகள் அடங்கிய ஒரு கட்டு சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வரையில் கொடுக்கின்றனர்.
ஆனால், வியாபாரிகள் அதனை ரூ.700 முதல் ரூ.800 வரைக்கும் விற்பனை செய்கின்றனர். இதனால், வியாபாரிகளுக்கு ரூ.500 வரையில் லாபம் கிடைக்கிறது. இதில் உற்பத்தி செய்யும் விவசாயிகள் உரிய லாபம் கிடைப்பதில்லை.
இதனால், கோவையில் தக்காளி மற்றும் மற்ற காய்கறிகளுக்கு தனியாக சந்தை உள்ளது போல் வாழை இலை விற்பனைக்கும் ஒருங்கிணைந்த சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். வாழை சாகுபடி அதிகமாக உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்






