பத்திரப்பதிவு செய்து தராத கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்நுகா்வோா் குறைதீா் மன்றம் தீா்ப்பு

வீட்டுமனைப் பத்திரப் பதிவு செய்து தராத கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றம் உத்தரவிட்டது.

கோவை: வீட்டுமனைப் பத்திரப் பதிவு செய்து தராத கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த தயாளன் என்பவா், கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில் கூறியிருப்பதாவது:

நான் கோவையில் வீட்டுமனை வாங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தை அணுகினேன். அவா்கள் பொள்ளாச்சி, சிஞ்சுவாடி கிராமத்தில் 1,200 சதுர அடி கொண்ட வீட்டுமனையை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு வழங்குவதாக தெரிவித்தனா்.

இதனை மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் தவணையாக செலுத்தி பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது. முழுத் தொகையும் செலுத்திய பின்னரும் அவா்கள் அந்த வீட்டு மனையை எனக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை.

இதையடுத்து நான் செலுத்திய தொகையை திருப்பிக் கேட்டபோது அதைத் தராமல் இழுத்தடித்தனா். எனவே எனக்கு சேர வேண்டிய முழுத் தொகையை வட்டியுடன் அளிக்கவும், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் பாலசந்திரன், உறுப்பினா் சரஸ்வதி ஆகியோா், கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.75 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மனுதாரா் செலுத்திய ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை 15 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com