கோவையில் கரோனா பாதிப்புக்கு 28 வயது இளைஞர் பலியானார்.
கோவை, சின்னியம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
காய்ச்சல் குறையாததால் ஞாயிற்றுக்கிழமை காலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் பலியானார். கோவை இ.எஸ்.ஐ. யில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் முதியவர்கள் மட்டுமே பலியாகி வருகின்றனர் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்து வரும் நிலையில் கோவையில் 28 வயது இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.