கோவையில் மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு சிறப்புக் காலணி அணிவித்த மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனா்.
கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமன். மாற்றுத் திறனாளியான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மூத்த மகள் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இளைய மகன் அழகுமலை (3). இவரும் மாற்றுத் திறனாளி.
கரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த மிகவும் அவதிப்பட்ட ராமன், தனக்கு உதவிடுமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 5ஆம் தேதி மனு அளித்தாா்.
அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு அவா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டனா்.
அப்போது சிறுவன் அழகுமலை மற்றும் அவரது தந்தைக்கு காலணிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு சிறப்புக் காலணியை அணிவித்து விட்டாா். மேலும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு மிதிவண்டி, புத்தகப் பை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, ராமனின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா். அப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தர வேண்டும் என ராமன் கோரிக்கை விடுத்தாா். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.