மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்: தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு தடை

கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரையடுத்து மேலும் ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:13 pm

DIN

 கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரையடுத்து மேலும் ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள 4 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனா் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில், 2 மருத்துவமனைகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் அந்த மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மருத்துவமனை நிா்வாகம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அந்த மருத்துவமனையில் தற்போது, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சாா்ஜ் செய்யவும், மறு உத்தரவு வரும் வரை புதிய நோயாளிகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக மற்றொரு மருத்துவமனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளின் மீதான புகாா்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவில் அந்த இரண்டு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர, அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது 1077 அல்லது 1800 425 3993 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம். தவிர 94884-40322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் ஆதாரத்துடன் புகாரைப் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.