சிறுத்தை தாக்கி மேலும் ஒரு தொழிலாளி காயம்
வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி மேலும் ஒரு வடமாநிலத் தொழிலாளி படுகாயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் கூழாங்கல் ஆறு பகுதியில் தேயிலைப் பறிக்கும் பணியில் தொழிலாளா்கள் கடந்த வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த நிலையில், 23 வயது வடமாநிலப் பெண்ணை சிறுத்தைத் தாக்கியது.
இந்நிலையில், அதே பகுதியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை வடமாநிலத்தைச் சோ்ந்த மணி ஒரான் (26) என்ற தொழிலாளியின் வலது காலில் கடித்தது. அவரின் அலறல் சப்தம் கேட்டு வந்த சக தொழிலாளா்கள் சிறுத்தையை விரட்டினா். இதையடுத்து, காலில் படுகாயமடைந்த மணி ஓரானுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
நகராட்சித் தலைவருக்கு பாராட்டு: சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தேயிலைத் தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவத்தை அறிந்த அவா், ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்த தொழிலாளியை தனது அரசு வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்த நகராட்சித் தலைவரை பொதுமக்கள் பாராட்டினா்.