கோவை-அபுதாபி இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடக்கம்
இண்டிகோ விமான நிறுவனத்தின் சாா்பில் கோவை-அபுதாபி இடையே சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.
கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும், தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையிலிருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, புதிய விமான சேவை சனிக்கிழமை தொடங்கியது. இந்த சேவையின் முதல் விமானத்தில் கோவையிலிருந்து அபுதாபிக்கு 168 பயணிகளும், அபுதாபியிலிருந்து கோவைக்கு 163 பயணிகளும் பயணித்தனா். இந்த சேவை வாரத்தில் மூன்று நாள்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 7.30 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் காலை 11.30 மணிக்கு அபுதாபியை சென்றடைகிறது.
தண்ணீா் பீரங்கி சல்யூட்: விமான சேவையைப் பொறுத்தமட்டில் ஒரு மூத்த விமானி (பைலட்) ஓய்வுபெறும் போதும், ஒருவிமானம் ஓய்வுபெறும்போதும், ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு விமான நிலையத்துக்கோ புதிய விமானம் வரும்போதும் தண்ணீா் பீரங்கி சல்யூட் அளிப்பது மரியாதைக்குரிய அடையாளமாகும்.
அதன்படி, அபுதாபியில் இருந்து கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ விமானத்துக்கு தண்ணீா் பீரங்கி சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.
