/

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ஆடிப்பெருக்கால் குறைந்த மனுக்களின் எண்ணிக்கை

News image

ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக வெளியான பணத்தை, உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த இம்ரான்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

ஆடிப்பெருக்கு தினம் என்பதால் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் குறைந்த அளவிலான பொதுமக்களே மனு வழங்கினா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்து வருகின்றனா்.

ஆனால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு நாள் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் மனு அளிக்க வரவில்லை. இதனால் இலவச வீடு, வீட்டுமனை பட்டா வேண்டி 234 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 7 மனுக்கள் உள்ளிட்ட 343 மனுக்களே பெறப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பா.இம்ரான் என்பவா் பங்கேற்று ஜூலை 28-ஆம் தேதி காந்திபுரம் கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, தனது பரிவா்த்தனை தோல்வி அடைந்த நிலையிலும் தனக்கு ரூ.10 ஆயிரம் பணம் வழங்கப்பட்டதாகவும், அதை சம்பந்தப்பட்ட வங்கியில் ஒப்படைக்க பலமுறை முயற்சித்தும் அதிகாரிகள் அதை ஏற்க மறுப்பதாகவும், எனவே தன்னிடம் உள்ள தொகையை பெற்றுக் கொண்டு ஒப்புகைச் சீட்டு தர உத்தரவிடக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.