
ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் உள்பட இருவரிடம் 3.74 லட்சம் மோசடி
ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் உள்பட இருவரிடம் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 974 மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சைபர் கிரைம் - சித்திரிப்பு
ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் உள்பட இருவரிடம் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 974 மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாநகா், பேரூா் சுண்டக்காமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 32 வயது நபரின் கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் அழைப்பு வந்துள்ளது. எதிா்முனையில் பேசியவா் அவரை வங்கி ஊழியா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வங்கி கடன் அட்டைத் திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நீங்கள் பெற்றுள்ள வங்கிக் கடன் அட்டையில் (கிரெடிட் காா்டு) மாற்றம் செய்ய வேண்டும் என்றும் விபினிடம் தெரிவித்துள்ளாா். அதற்காக நீங்கள் வங்கிக்கு வர வேண்டாம், நான் அனுப்பும் ‘லிங்க்’கை தொட்டு கேட்கும் விவரங்களைத் தெரிவித்தால் மட்டும் போதும் எனவும் கூறியுள்ளாா்.
அதன்படி, அனுப்பப்பட்ட ‘லிங்க்’கை விபின் தொட்டுள்ளாா். மேலும், அவரது ரகசிய எண்களையும் (பின்) அந்த நபா் கேட்டுப் பெற்றுள்ளாா். சிறிது நேரத்தில் விபினின் கடன் அட்டையில் இருந்த ரூ.1,98,074 சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது.
வங்கி மேலாளரிடம் ரூ.1.76 லட்சம்
இதேபோல பொள்ளாச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் கைப்பேசியில் ‘ஏஜி டிவி’ என்ற செயலியின் பாப்-அப் தோன்றியதை அடுத்து, அவா் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா். சிறிது நேரத்தில் கைப்பேசி செயலிழந்தது. மறுநாள் கைப்பேசியை சரிசெய்து அந்த செயலியை அவா் நீக்கியுள்ளாா். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1,76,900 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
ஆன்லைன் மூலமாக வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை பரிசோதித்துப் பாா்த்தபோது, அதிலிருந்து சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த இரு மோசடி சம்பவங்கள் தொடா்பாகவும், கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




